2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் கோடை விழா , மலர் கண்காட்சி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் நேற்று கோடை விழா- மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
சேலம்:
2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் நேற்று கோடை விழா- மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கோடை விழா
சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சீசன் களைகட்டி இருக்கும். ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு ஆண்டுதோறும் மே மாத இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கொரோனா நோய் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கோடை விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அமைச்சர்கள்
இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 45-வது கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று மாலை ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர்கள் 3 பேரும், அங்கு மலர்களால் அமைக்கப்பட்டிருந்த மேட்டூர் அணை, அரசு பஸ், வண்ணத்துப்பூச்சி உள்பட பல்வேறு மலர் அலங்காரங்களையும், வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்தனர்.
5 லட்சம் பூக்கள்
முன்னதாக தோட்டக்கலைத்துறை சார்பில் அன்னாசி பழங்கள், மாம்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், பலாப்பழம் உள்ளிட்ட காய்கறி பழங்களை கொண்டு பூங்காவில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வளைவை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பூக்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள்
ஒரு லட்சம் ரோஜாக்களால் சேலத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் மேட்டூர் அணை வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இதேபோல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டி, பழங்கால தமிழர்களின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், அரசு டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத்தை குறிக்கும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட அரசு பஸ், குழந்தைகளை கவரும் வகையில் வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்ட சின்சான் கார்ட்டூன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ வண்ணத்துப்பூச்சி மலர் அலங்காரத்தில் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மலர் அலங்காரமும் இடம்பெற்றுள்ளது. இந்த மலர் அலங்காரங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
10 ஆயிரம் பூந்தொட்டிகள்
சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் சிறந்த கொய் மலர்களான ரோஜா, ஜெர்பிரா, ஆந்தூரியம், கார்னேசன், ஆர்கிட்ஸ் டெய்சி, ஜெரானியம், கிரைசான் திமம் கோல்டன் ராட் உள்பட 100-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்திலேயே வளர்க்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அண்ணா பூங்காவில் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலையில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியையும் பார்வையிட்டனர். இதனால் நேற்று முழுவதும் அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏற்காடு கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் எம்.பி.க்கள் பொன்.கவுதமசிகாமணி, சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, தி.மு.க. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மஞ்சக்குட்டை ஊராட்சி தலைவர் சுகுந்தா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






