தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளியையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் வருகிற 30-ந்தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு்ள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான ப்ளூ பிரிண்ட் வரைபடம் 6 நகல்கள், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம். சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமத்திற்கான ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு, வரி ரசீது, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். போன்ற வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு உரிமம் வேண்டுவோர் வருகி்ற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன், ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன், தற்காலிக உரிமத்தில் ஆணையை அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.






