பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம்


பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 30 Sep 2023 9:30 PM GMT (Updated: 30 Sep 2023 9:30 PM GMT)

நெல், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

காப்பீட்டு திட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-24-ம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்காச்சோளத்துக்கும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, நடப்பாண்டில் தேனி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு 14 பிர்க்காக்கள் மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு 7 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டு அதன் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

பிரீமியம் தொகை

இவ்வாறு சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். மக்காச்சோள பயிருக்கு கடைசி நாள் வருகிற டிசம்பர் 30-ந்தேதி ஆகும்.

நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.528.75 மற்றும் மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.429 பிரீமியமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story