என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் தம்பி டி.ஆர்.பி. ராஜா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் தம்பி டி.ஆர்.பி. ராஜா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
x

தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது:-

" சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூபாய் 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். மறைமுகமாக 12,30,945 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக இந்த முதலீடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழ்நாட்டில் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

திராவிட மாடல் ஆட்சியில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளோம். தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும். சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மகத்துவம் என்றென்றும் நினைவுகூரப்படும்.

உலகமே வியக்கும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்து இருக்கிறார். என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் தம்பி டி.ஆர்.பி.ராஜா" என நெகிழ்ந்துபோய் டி.ஆர்.பி.ராஜாவை பாராட்டிப் பேசியுள்ளார் .

2 நாள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதால், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் மகிழ்ந்துள்ளார். அதன் வெளிப்பாடாகவே நிறைவு விழாவில், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவை உச்சி குளிர பாராட்டியுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Next Story