வாலாஜாபாத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி


வாலாஜாபாத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி
x

வாலாஜாபாத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட வல்லபாக்கம் பாரதியார் காலனி பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 24). 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாபர் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேவி கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வல்லப்பாக்கம் பகுதியில் தேவியின் வீட்டின் அருகில் உள்ள பொது கிணறு மதில் மீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேவி கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கும், காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த தேவியின் உடலை ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் மீட்டனர். தேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story