போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 July 2023 2:00 PM GMT (Updated: 16 July 2023 2:00 PM GMT)

போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

சென்னை போரூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 21). அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நிறுத்தி இருந்த இவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது. இதுபற்றி போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமார் 15 நாட்களில் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக சின்ன போரூர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி (22) என்பவரை கைது செய்தனர். இவர், பகலில் மோட்டார்சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும், இரவு நேரங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடுவதும் தெரிந்தது.

தன்னை போலீசார் பிடிக்காமல் இருக்க திருடிய மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் உள்ள அனைத்து தெருக்களின் வழியாகவும் ஓட்டிச்சென்று, இறுதியாக கெருகம்பாக்கத்தில் உள்ள நண்பரின் வீட்டில் மறைத்து வைத்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story