திருவண்ணாமலை அருகே வாலிபர் எரித்துக் கொலை; மண்டையோடு, எலும்பு கண்டுபிடிப்பு..!


திருவண்ணாமலை அருகே வாலிபர் எரித்துக் கொலை;  மண்டையோடு, எலும்பு கண்டுபிடிப்பு..!
x

வந்தவாசி அருகே உள்ள வற்றிய குளத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்து எரிந்த நிலையில் எலும்புக் கூடாக இருந்ததால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சு நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள வற்றிய குளத்தில் எரிந்த நிலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தெள்ளார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெள்ளார் காவல் நிலைய போலீசார் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சேகரித்து விசாரணை செய்தனர். மேலும் எரிந்த நிலையில் டி-ஷர்ட்டும் மற்றும் கடை சாவி இருசக்கர வாகன சாவி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (வயது 22) என தெரியவந்தது.

இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பாமல் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் போலீசார் இதுகுறித்து மூன்று பேர்களை பிடித்து விசாரணை செய்ததில் விஜயை கொலை செய்து பின்னர் அவருடைய இரு சக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் வீசியதாக முதற்கட்ட தகவல் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்களை கொண்டு இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர்.மேலும் போலீசார் விசாரணையில் கார் வாங்குவதில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக விஜய்யை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

இளைஞரை எரித்து கொலை செய்து ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இருப்பது குறித்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலிசார் குவிக்கப்பட்டள்ளனர்.


Next Story