வாலிபர் தீக்குளித்து தற்கொலை


வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x

விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் வைகுண்ட மணி என்பவருடைய மகன் தனசிங் (வயது 32). இவருக்கும், அடையக்கருங்குளத்தை சேர்ந்த மஞ்சுபாரதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மஞ்சு பாரதி இறந்து போனார். அதில் இருந்து மன உளைச்சலில் இருந்த தனசிங் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அவருடைய தம்பி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தனசிங் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் இலந்தைகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் சண்முகதங்கதுரை (43). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது மனைவியிடம் தகராறு செய்தாராம். இதனை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சண்முகதங்கதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story