கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்; வீடியோ காட்சிகளால் பரபரப்பு


கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்; வீடியோ காட்சிகளால் பரபரப்பு
x

கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்

மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணி பாய் (வயது 65). இவர் அதே பகுதியில் உள்ள தெருவில் மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு அங்கு கஞ்சா போதையில் வந்த வாலிபர்கள் சிலர் அருகில் இருந்த கடையில் தகராறு செய்தனர் பின்னர் அதே வேகத்தில் இங்கு வந்தவர்கள் ராணி பாயிடம் ஓசியில் பஜ்ஜி, போண்டா கேட்டு தகராறு செய்தனர். அவர் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அங்கு இருந்த பஜ்ஜி, போண்டாக்களை கீழே தள்ளிவிட்டு கியாஸ் சிலிண்டரின் வயரை பிடுங்கி விட்டு அந்த சிலிண்டரை தூக்கி ராணிபாய் மீது போட்டார். இதில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர் இதில் காயம் அடைந்த ராணி பாயை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்

இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். மூதாட்டியின் மீது போதையில் கியாஸ் சிலிண்டரை தூக்கி போடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலும் இந்த பகுதியில் அதிக அளவில் கஞ்சா போதையில் வாலிபர்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Next Story