ஜமீன்முத்தூர் பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரம்

பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு 4 வழிச்சாலை பணிக்காக ஜமீன்முத்தூர் பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு 4 வழிச்சாலை பணிக்காக ஜமீன்முத்தூர் பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
4 வழிச்சாலை
பொள்ளாச்சி-பாலக்காடு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவிற்கு லாரி, கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால் பாலக்காடு ரோட்டில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்த நிலையில் பெருகி வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜமீன்முத்தூரில் வழியாக செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இருவழிச்சாலையாக உள்ள பாலத்தின் தடுப்பு சுவர்களை இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
60 சதவீத பணிகள் நிறைவு
பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையை பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிகள் ரூ.70 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அடுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை பணிக்கு நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில் ஜமீன்முத்தூரில் பாலம் இருவழிச்சாலையாக உள்ளது. இதனால் பாலத்தை அகலப்படுத்த தடுப்புகள் இடித்து அகற்றப்படுகிறது. தற்போது வரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. வருகிற ஜனவரி மாதம் வரை ஒப்பந்த காலம் உள்ளது. இருப்பினும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






