மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது


மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
x
தினத்தந்தி 3 March 2021 3:47 AM GMT (Updated: 3 March 2021 3:47 AM GMT)

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் நேர்காணல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கியது. முதல் நாளில் 9 மாவட்டங்களுக்கு நடந்தது.

சென்னை, 

சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களிடம் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் கட்சி அலுவலகத்தில் பெறப்பட்டு வந்தன.

அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் பெறப்பட்டு இருந்தன. அவற்றில் 7 ஆயிரத்து 967 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒருவர் 2 தொகுதிகளில் கூட மனு தாக்கல் செய்திருந்தனர். அந்தவகையில் சுமார் 7 ஆயிரம் பேர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்பட்டது.

நேர்காணல் தொடங்கியது

அவ்வாறு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கான வேட்பாளர் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. இந்த வேட்பாளர் நேர்காணல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்பட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு மேல் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை கிழக்கு, மத்தியம், தென்காசி வடக்கு, தெற்கு மற்றும் ராமநாதபுரம் ஆகிய கட்சி நிர்வாக ரீதியான மாவட்டங்களுக்கும், மாலையில் விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய கட்சி நிர்வாக ரீதியான மாவட்டங்களுக்கும் என 9 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.

400 பேர் பங்கேற்பு

காலையில் நடந்த நேர்காணலில் கன்னியாகுமரி தொகுதியில் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உள்பட சிலரும், தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவன், ஜெகன் உள்பட சிலரும், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜெயதுரை, மணல்மேடு சுரேஷ், ரமேஷ், முத்து செல்வன் உள்பட சிலரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஜோயல், உமரி சங்கர், சொர்ண குமார் உள்பட சிலரும்,

பாளையங்கோட்டை தொகுதியில் மைதீன்கான், அப்துல் வஹாப், இறையன்பன் குத்தூஸ், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை, சிவ பத்மநாபன், எழில்வாணன் உள்பட சிலரும், திருநெல்வேலி தொகுதியில் சரவணன், லட்சுமணன், முத்துராமலிங்கம், மாலைராஜா உள்பட சிலரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆவுடையப்பன், சுவாமிநாதன், இசக்கி பாண்டியன் உள்பட சிலரும் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஸ்ரீவைகுண்டம்

இதில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 21 ஆண்டுகளாக காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், இந்த முறை தி.மு.க. போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுதாரர்கள் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் ஒருவர் இதை சொல்வதற்காகவே விருப்ப மனு தாக்கல் செய்து மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பிற்பகலில் நடந்த நேர்காணலில் 500-க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த சுமார் 15 முதல் 35 பேர் வரை நேர்காணலில் பங்கு பெற்றனர்.

6-ந்தேதிவரை நடக்கிறது

அவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உங்களுடைய தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?, கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு எந்த அளவு உள்ளது?, என்ன படித்து இருக்கிறீர்கள்?, கட்சி பொறுப்பில் ஏதாவது இருக்கிறீர்களா?, தொகுதியில் வேட்பாளராகிய உங்களின் செல்வாக்கு எந்த அளவு இருக்கிறது? என்பது உள்பட சில கேள்விகளை கேட்டார்.

நேற்று தொடங்கிய வேட்பாளர் நேர்காணல் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. இன்று (புதன்கிழமை) மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது.

Next Story