தேர்தலுக்குப்பிறகு போராட்டம் தீவிரம் ஆகும்: ‘வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு’; டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி


தேர்தலுக்குப்பிறகு போராட்டம் தீவிரம் ஆகும்: ‘வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு’; டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 6 March 2021 2:42 AM GMT (Updated: 6 March 2021 2:42 AM GMT)

வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும், அதற்கான போராட்டம் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாகும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி

பா.ம.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வளர்ச்சிமிகு தமிழகம் எப்படி மலரும் என்பதை தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறோம். தமிழ் மக்களின் மகிழ்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியில்தான் உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலும், முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். நல்லாட்சி தொடர வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் காக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைய பா.ம.க. முடிவு செய்தது. தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். நிச்சயமாக தமிழ்நாடு தொடர்ந்து முன்னேறும். அதை பா.ம.க. உறுதிசெய்யும். எனவே பா.ம.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

பூரண மதுவிலக்கு

தமிழ்நாட்டில் உள்ள எல்லா சமுதாயத்துக்கும் கடந்த 40 ஆண்டுகளாக போராடுகிறேன். பல சமுதாயங்களுக்கு நான் இடஒதுக்கீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லோரும் சமநிலைக்கு வர வேண்டும், சமநிலை, சமூகநீதி வரவேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்தையும் மேலே தூக்கிவிட வேண்டும்.

தொடர்ந்து மதுவிலக்குக்காக போராடி வருகிறோம். ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம். அதை நிச்சயமாக செய்வோம். தேர்தலுக்குப் பிறகு அதற்கான போராட்டம் தீவிரம் ஆகும்.

ஆலோசனை சொல்வதற்கு நாங்கள் இருக்கிறோம். செயல்படுத்துவதற்கு அவர்கள் (அ.தி.மு.க.) இருக்கிறார்கள். ஏற்கனவே நாங்கள் நிறைய ஆலோசனைகளை சொல்லியிருக்கிறோம். நிச்சயமாக நல்லது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றம், முன்னேற்றம், தமிழ்நாடு

அதனையடுத்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மதுவிலக்கைப் பற்றி பேசாதவர்களும், நாங்கள் அதை கையில் எடுத்ததும் கொள்கைரீதியாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அது எங்களுக்கு கிடைத்த முதல் பெரிய வெற்றி. நிச்சயமாக எங்களின் நோக்கம் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவதுதான். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

நிதிநிலையை பொறுத்தவரையில் அனைத்து மாநிலங்களும் கடன் பெற்றிருக்கின்றன. அந்த அடிப்படையில் தமிழக அரசு அதிகமாக கடன் பெற்று கடன் சுமையில் இருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு தேவையான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி நிதிச்சுமையைக் குறைப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, மக்கள்தொகை அடிப்படையில், சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மாற்றம், முன்னேற்றம், தமிழ்நாடு என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது உறுதியாக நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story