தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு


தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு
x
தினத்தந்தி 6 March 2021 10:00 AM GMT (Updated: 6 March 2021 10:00 AM GMT)

தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக 
திமுக - மதிமுக இடையே நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

இதற்கிடையில், தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவெடுப்பது தொடர்பாக மதிமுக தலைமையமான தாயகத்தில் தற்போது அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. கட்சியின் உயர்நிலைக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணைபொதுச்செயலாளர் மல்லை சத்தியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story