தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்
x
தினத்தந்தி 12 March 2021 6:03 AM GMT (Updated: 12 March 2021 6:03 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

தேர்தல் நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதிபங்கீடு, கூட்டணி உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அதேபோல், தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்கும் தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வழங்கலாம். ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது.   

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் நிபந்தனை வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் மற்றும் டெபாசிட் தொகையை செலுத்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Next Story