தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல்; பா.ம.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து? வேட்பாளர் சாலை மறியல்


தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல்; பா.ம.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து? வேட்பாளர் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 March 2021 11:09 PM GMT (Updated: 23 March 2021 11:09 PM GMT)

ஆத்தூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. நிர்வாகியை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டதால் அடுத்தடுத்து சாலை மறியல் நடந்தது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நேற்று இவர், திண்டுக்கல் அருகே வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தம்பட்டியில் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தன்னை எதிர்த்து போட்டியிடும்தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமிக்கு எதிராக அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்ட தி.மு.க.வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திலகபாமாவுடன் வந்த அ.தி.மு.க.வினருக்கும்,தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் உருவானது. அந்த வேளையில் திலகபாமாவை 2 பேர் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பா.ம.க. நிர்வாகி காயம்

அப்போது, தேர்தல் பணிக்காக வந்திருந்த ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க., செயலாளர் ஹக்கீம் தடுத்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து வேட்பாளர் திலகபாமா தலைமையில் அ.தி.மு.க., பா.ம.க.வினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் தி.மு.க.வினர் மீது பா.ம.க. சாா்பில் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கத்தியால் குத்தியதாக புகார்

அந்த புகாரில், தி.மு.க.வினர் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் கத்தியால் குத்தியதில் ஹக்கீமுக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் புகார் கொடுத்து 2 மணி நேரத்துக்கு மேல் ஆனபிறகும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க., பா.ம.க.வினர் மீண்டும் செம்பட்டியில் வேட்பாளருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு மறியலை கைவிட்டு அ.தி.மு.க., பா.ம.க.வினர் பிரசாரத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே தி.மு.க. சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story