தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சிவகங்கையில் இன்று தேர்தல் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் பேருந்து மோதி உயிரிழந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரை உள்ளடக்கிய பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சிவகங்கையில் பறக்கும்படையில் இடம்பெற்றிருந்த போலீசார் இன்று வழக்கமான வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சிவகங்கை - இளையன்குடி சாலையில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து போலீசார் மீது மோதியது. இந்த விபத்தில் 2 போலீசார் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று மதியம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிவகங்கையில் தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு போலீசாருக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
Related Tags :
Next Story