150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை -10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது திமுக


150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை -10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது திமுக
x
தினத்தந்தி 2 May 2021 11:32 AM GMT (Updated: 2 May 2021 11:32 AM GMT)

சட்டமன்ற தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தமிழகத்தில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 157 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், திமுக வெற்றி பெறுவதற்கு தேவையான பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்தாலும், இனி தான் நாம் கவனமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெற்றிச் சான்றிதழை தருவதில் சிக்கல் ஏற்பட்டால், அதனை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இனிப்புகளை வழங்கி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story