சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 3,169 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது.
பெய்ஜிங்,
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story