நேபாளத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 60 பேர் பலி


நேபாளத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 60 பேர் பலி
x
தினத்தந்தி 13 July 2020 9:33 AM GMT (Updated: 13 July 2020 9:33 AM GMT)

நேபாளத்தில் ஏற்பட்டு உள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 4 நாட்களில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

காத்மண்டு,

இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியதன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வெள்ள நீரானது, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சுற்றி தேங்கியுள்ளது.  கனமழையால், நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  இதனால் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

அவர்கள் பள்ளி கூடங்கள் மற்றும் சமூக நல மையங்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று வெள்ளத்தின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்த இரு சம்பவங்களிலும் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  41 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணியில் மீட்பு மற்றும் நிவாரண பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இமயமலையை ஒட்டிய நாடான நேபாளத்தில் பருவமழை காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கத்திற்குரிய ஒன்றாகி விட்டது.  கடந்த 12ந்தேதி வரை இதுபோன்று ஓராயிரம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர்.  70 முதல் 80 பாதுகாப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story