பிரான்சில் 12 வயது சிறுமி பலாத்காரம், சித்ரவதை செய்து கொலை; பெண் உள்பட 2 பேர் கைது


பிரான்சில் 12 வயது சிறுமி பலாத்காரம், சித்ரவதை செய்து கொலை; பெண் உள்பட 2 பேர் கைது
x

பிரான்சில் 12 வயது சிறுமியை பலாத்காரம், சித்ரவதை செய்து, கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



பாரீஸ்,


பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி லோலா (வயது 12). கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற பின் லோலா வீடு திரும்பவில்லை.

இவர்களது குடியிருப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் காணப்பட்டு உள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோருக்கு கவலையுடன், பயமும் தொற்றி கொண்டது. இந்நிலையில், குடியிருப்பு கட்டிடத்தின் பின்பகுதியில் பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் துணிகளின் கீழே சிறுமியின் உடல் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை வீடின்றி, அந்த பகுதியில் சுற்றி திரிந்த நபர் ஒருவர் முதலில் கவனித்து உள்ளார். பின்னர், இதுபற்றிய தகவல் போலீசாருக்கு சென்றுள்ளது. சிறுமியின் கழுத்தில் பெரிய அளவில் காயம் இருந்துள்ளது.

சிறுமி லோலா மூச்சு திணற செய்ததில் உயிரிழந்து உள்ளார் என பிரேத பரிசோதனை முடிவு தெரிவிக்கின்றது. சந்தேகத்தின் பேரில் போலீசார் 6 பேரை பிடித்து விசாரித்து உள்ளனர். பின்பு, 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 24 வயது பெண்ணை பாரீஸ் நகரின் வடமேற்கு புறநகரான போயிஸ்-கொலம்பிஸ் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

அந்த பெண் பெரிய பெட்டி ஒன்றை தூக்கி செல்வதற்கு ஒருவருக்கு பணம் தர முன்வந்துள்ளார். அந்த நபர் போலீசில் சாட்சியம் அளித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில், இளம்பெண்ணுக்கு புகலிடம் கொடுத்து வாகனத்தில் சுற்றி வந்த சந்தேகத்திற்குரிய 43 வயது நபரும் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை சித்ரவதை, பலாத்காரம் செய்து, கொன்று உடலை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 பேரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின்பு, லோலாவை நன்கு தெரிந்த தனது மகளுக்கு உடல்நலம் குன்றி விட்டது எனவும் பள்ளிக்கு போகவும் அவளுக்கு விருப்பமில்லை என தாயார் ஒருவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, லோலா படித்த பள்ளி பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே மனநலம் சார்ந்த உதவிகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்து உள்ளது. குடியிருப்புவாசிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும் என மேயர் பிராங்கோயிஸ் டேக்நாட் கூறியுள்ளார்.


Next Story