நேபாள விமான விபத்து: 21 பேர் இதுவரை சடலங்களாக மீட்பு


நேபாள விமான விபத்து:  21 பேர் இதுவரை சடலங்களாக மீட்பு
x
தினத்தந்தி 30 May 2022 11:28 AM GMT (Updated: 30 May 2022 12:35 PM GMT)

முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

காத்மாண்டு,

நேபாளத்தில் 2009-ம் ஆண்டு முதல் விமான போக்குவரத்து சேவையை நடத்தி வரும் தாரா ஏர் நிறுவனத்தின்' தி டுவின் ஓட்டர் 9 என்-ஏ.இ.டி.' என்ற விமானம் நேற்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. சில மணி நேர தேடுதலுக்குப் பின் இந்த விமானம் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.

முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவை காத்மண்டுவுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ பகுதியில், நேபாள ராணுவ வீரர்கள் 15 பேர் அடங்கிய குழு உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதுவரை 21 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


Next Story