கடுமையான நிதி நெருக்கடி: ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டது


கடுமையான நிதி நெருக்கடி:  ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டது
x
தினத்தந்தி 19 Oct 2019 5:37 AM GMT (Updated: 19 Oct 2019 5:37 AM GMT)

கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டு விட்டது.

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்;

மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இனம், மொழி மற்றும் சமய வேறுபாடுகளை நீக்கி நாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்றவை ஐ.நா. சபையின் தலையாய பணிகள் ஆகும்.

ஐ.நா. சபையின் செயல்பாடுகளுக்கு அதன் உறுப்பு நாடுகள் நிதி வழங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபைக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் ஐ.நா.வுக்கு தேவையான நிதியை உறுப்பு நாடுகள் வழங்கும்.

இந்த நிலையில்  ஐ.நா. சபை, நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாகவும், மொத்த நிதியும் இந்த மாத இறுதிக்குள் தீர்ந்து, சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் கடந்த 9-ம் தேதி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என்று ஐ.நா. சபையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐ.நா. சபையில் 131 நாடுகளில் இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன.

இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை. இதனால் ஐநா.சபைக்கு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐநா.சபையின் பட்ஜெட்டிற்கு உங்கள் நாடு தனது நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. தற்போது  வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செயல்படாது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

Next Story