தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இஸ்ரேலுக்கும் பரவியது


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இஸ்ரேலுக்கும் பரவியது
x
தினத்தந்தி 26 Nov 2021 9:21 AM GMT (Updated: 26 Nov 2021 9:22 AM GMT)

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்று மருத்துவ நிபுணர்களால் அறியப்படும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜெருசலேம், 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட போதிலும்  இன்னும் முழுமையாக ஓய்ந்த பாடில்லை. தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் கடுமையாகவே உள்ளது. 

கொரோனா தடுப்பூசி போடுவது மட்டும் அல்லாமல் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆஸ்திரியாவில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்று மருத்துவ நிபுணர்களால் அறியப்படும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உள்ள தடுப்பூசிகள் இந்த புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்தியாவிலும் விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ண்டறியப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வனா ஆகிய நாடுகளில் இருந்து அல்லது அந்த நாடுகளின் வழியாக வரும் பயணிகளை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பரவியது

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட பெருமளவு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா இஸ்ரேலுக்கும் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலாவி நாட்டில் இருந்து இஸ்ரேல் திரும்பிய நபருக்கு பரிசோதனை செய்ததில் புது வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story