ஆப்கானிஸ்தானின் ரூ.52 ஆயிரம் கோடி பணம் - இரண்டாக பிரிக்க அமெரிக்கா முடிவு


ஆப்கானிஸ்தானின் ரூ.52 ஆயிரம் கோடி பணம் - இரண்டாக பிரிக்க அமெரிக்கா முடிவு
x
தினத்தந்தி 11 Feb 2022 9:35 PM GMT (Updated: 11 Feb 2022 9:35 PM GMT)

தங்களிடம் உள்ள ஆப்கானிஸ்தானின் 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயணத்தை நிவாரணத்திற்கும், இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த சொத்துக்கள், பணத்தை பல நாடுகள் முடக்கின. சர்வதேச நிதியமும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை முடக்கியது.

அந்த வகையில், ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் (10 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பணம், சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவற்றில், அமெரிக்காவில் மட்டும் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான சுமார் 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ( 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முடக்கப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி இந்த பணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான பணத்தை அமெரிக்கா பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, பணத்தை இரு பங்குகளாக பிரிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

52 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை (7 பில்லியன்)  இரு பங்காக 26 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (3.5 பில்லியன்) என பிரித்து ஒரு பங்கை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரண பணிக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் கைகளுக்கு இந்த பணம் செல்லாமல் நேரடியாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரண உதவியாக அனுப்ப இந்த பணத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளது.

மற்றொரு பங்கான 26 ஆயிரத்து 250 கோடி ரூபாயை (3.5 பில்லியன்) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

9/11 தாக்குதல் என அழைக்கப்படும் இந்த தாக்குதல் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பால் நிகழ்த்தப்பட்டது. அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் திட்டமிடலில் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 ஆயிரத்து 977 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story