36 நாடுகளின் விமானங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்க தடை விதிப்பு


36 நாடுகளின் விமானங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்க தடை விதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 2:29 PM GMT (Updated: 28 Feb 2022 2:29 PM GMT)

ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 36 நாடுகளில் விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த புதின் தடை விதித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷியாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை. 

மீண்டும் ரஷியா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது. அதன்படி, ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷிய பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும். ரஷிய படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை உக்ரைன் முன்வைத்துள்ளது. 

இந்த நிலையில், ரஷிய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்ததற்கு பதிலடியாக  ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 36 நாடுகளில் விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த புதின் தடை விதித்துள்ளார். 


Next Story