டேட்டிங்கில் நபரை நடுநிசியில் கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்... மர்மம் என்ன?


டேட்டிங்கில் நபரை நடுநிசியில் கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்... மர்மம் என்ன?
x
தினத்தந்தி 25 March 2022 9:20 AM GMT (Updated: 25 March 2022 9:20 AM GMT)

டேட்டிங்கில் ஈடுபட்ட நபரை நள்ளிரவில் ஈரானிய இளம்பெண் கத்தியால் பல முறை குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



லாஸ் வேகாஸ்,


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் (வயது 21) என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வழியே ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

இதன்பின்னர் ஹெண்டர்சன் நகரில் உள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என இருவரும் முடிவு செய்தனர்.  இதற்காக இரண்டு பேரும் ஓட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற நாளில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.  அதனை தொடர்ந்து, அந்த நபரின் கண்களை துணியால் நிக்கா கட்டியுள்ளார்.  பின்னர் விளக்குகளையும் அணைத்து உள்ளார்.  ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த நபருக்கு கழுத்து பகுதியின் ஓரத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது.

என்ன நடக்கிறது என உணர்ந்து கொண்ட அவர், நிக்காவை தள்ளி விட்டு விட்டு அவசர எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.  இதுபற்றி போலீசார் கூறும்போது, ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானி கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கவே, நிக்கா அந்த நபரை கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், ஓட்டல் ஊழியர் ஒருவரிடம் நடந்த விவரங்களை கூறி விட்டு நிக்கா தப்பியோட முயன்றுள்ளார்.  போலீசாரிடம் பிடிபட்ட நிக்கா கூறும்போது, கிரேவ் டிக்கர் என்ற பாடல் ஒன்றை கேட்டேன்.  அதன்பின்பே பழிவாங்கும் தூண்டுதல் தனக்குள் ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, கடந்த 2020ம் ஆண்டில், அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

அவருடன் ஈராக் ராணுவ துணை தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்தது.

இதன்பின், காசிம் உடலுக்கு நடந்த இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.

குவாசிம் சுலைமானி மரணத்திற்கு பின், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மயில் கானி ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார்.  அவர், சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என்று சபதமேற்றார்.

இந்நிலையில், அமெரிக்கர் ஒருவரை டேட்டிங் என்ற பெயரில் அழைத்து அவரை, ஈரானிய இளம்பெண் கத்தியால் குத்தி கொல்ல நடந்த முயற்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Next Story