போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது- இலங்கை மக்களுக்கு ராஜபக்சே உரை


போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது-  இலங்கை மக்களுக்கு ராஜபக்சே உரை
x
தினத்தந்தி 11 April 2022 2:31 PM GMT (Updated: 11 April 2022 2:31 PM GMT)

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது.

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வந்தாலும் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.

மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.ஆனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மக்கள் தினமும் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சே உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:  இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும் . மக்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. பலவீனமான பொருளாதாரத்தில் கொரோனா ஊரடங்கு அன்னிய செலவாணி இருப்பை குறைத்தது” இவ்வாறு அவர் பேசினார். 

Next Story