இந்தியாவுடன் மோத பாகிஸ்தானுக்கு தலீபான்கள் ஆயுத சப்ளை; திடுக் தகவல்

இந்தியாவுடனான எல்லை மோதலுக்கு தேவையான ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு தலீபான்கள் சப்ளை செய்கின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்க படைகள் முழு அளவில் வாபஸ் பெற்றபோது, ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை அந்நாடு பெருமளவில் அப்படியே விட்டு சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தானிய படைகளிடம் விட்டு சென்ற இந்த ஆயுதங்கள் அனைத்தும் தலீபான்கள் வசம் தற்போது சென்று விட்டன.
அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில், ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இந்த ஆயுதங்களும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாது என்று தலீபான்கள் தெரிவித்தனர்.
ஆனால், இதற்கு முரணாக அவர்கள் ஆயுத சப்ளையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்பட கூடிய சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றிய அந்த அமைப்பின் அறிக்கையில், ஆயுத கடத்தல்களை தடுக்க முறையான பாதுகாப்பு சோதனைகளை நடத்தி வருகிறோம். ஏனெனில் நாங்கள் முன்னேறி விட்டோம் என தலீபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால், ஆயுத சந்தை முழு அளவில் செழித்து வளருகிறது. பாகிஸ்தானுக்கு நாடு விட்டு நாடு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. இறுதியாக இந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக எல்லை கடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்படும் என்று அதிர்ச்சி தர கூடிய குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.
அதற்கு முன்பு, சட்டவிரோத ஆயுத கடத்தலை கட்டுப்படுத்த தவறியதற்காக பாகிஸ்தான் மிக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அதிக அளவில் இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும்போது, அந்த நாடே முதலில் பாதிக்கப்படும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.
Related Tags :
Next Story