கியூபா: எரிவாயு கசிவால் ஓட்டலில் வெடிவிபத்து; அருகே இருந்த பள்ளிக் கட்டிடம் சேதம் - 1 குழந்தை உள்பட 22 பேர் பலி!


கியூபா: எரிவாயு கசிவால் ஓட்டலில் வெடிவிபத்து; அருகே இருந்த பள்ளிக் கட்டிடம் சேதம் - 1 குழந்தை உள்பட 22 பேர் பலி!
x
தினத்தந்தி 7 May 2022 11:17 AM IST (Updated: 7 May 2022 11:17 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் கட்டிடத்தின் பக்கவாட்டில் பல மாடிகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

ஹவானா,

வட அமெரிக்க நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் ‘சரடோகா’ என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஓட்டல் நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஓட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தகவலறிந்து மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்நிலையில், ஓட்டல் கட்டிடத்தின் பக்கவாட்டில் பல மாடிகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்தன. 

சம்பவ இடத்தில் இருந்து தொலைக்காட்சியில் பேசிய  கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல், வரலாற்று சிறப்புமிக்க ஓட்டல் சரடோகாவில் ஏற்பட்ட வெடிவிபத்து, எரிவாயு கசிவால் ஏற்பட்டதாக தெரிகிறது. நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த ஓட்டல் மூடப்பட்டு தொழிலாளர்கள் மட்டுமே உள்ளே இருந்தனர் என்று தெரிவித்தார்.

மேலும், ஓட்டலின் அருகே செயல்பட்டு வந்த பள்ளிக்கூடத்தில் விபத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். 

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, குறைந்தது 15 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடக்கிறது. 
1 More update

Next Story