செக் குடியரசு நாட்டில் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை வீசி எறிந்த நபர்..!


செக் குடியரசு நாட்டில் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை வீசி எறிந்த நபர்..!
x
தினத்தந்தி 26 Oct 2023 11:33 PM GMT (Updated: 27 Oct 2023 6:51 AM GMT)

செக் குடியரசு நாட்டில் ஒரு நபர் ஹெலிகாப்டரில் பறந்தபடி மில்லியன் டாலர் பணத்தை சிதறவிட்டார்.

பிரேக்,

செக் குடியரசு நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரியும் கஸ்மா என்பவர், ஹெலிகாப்டரில் இருந்து இப்படி ஒரு மில்லியன் டாலர் பணத்தை கீழே கொட்டினார். இது இந்திய மதிப்பபில் 8¼ கோடி ரூபாய்க்கு சமமாகும்.

கமில் பார்டோஷேக் நகரின் மீது பறந்தபடி இப்படி பணத்தை சிதறவிட்டார். இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் பணமழையில் நனைந்தனர். ஒருகணம் வானில் இருந்து பணம் கொட்டுவதை அறிந்து திகைத்த அவர்கள் மறுகணமே பணத்தை பொறுக்குவதில் போட்டாபோட்டி போட ஆரம்பித்தனர்.

அவர் தொலைக்காட்சியில் ஒரு போட்டியாளரை அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்து இந்த தொகையை வழங்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அதற்கான போட்டியில் வெல்வது போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்ததால் யாரும் பரிசுக்கு தேர்வாக வில்லையாம்.

இதையடுத்து போட்டியில் பதிவு செய்த அனைத்து போட்டியாளர்களுக்கும் பணத்தை வினியோகிக்க முடிவு செய்தார். இதனால் போட்டியாளர்களின் இ-மெயில் முகவரிக்கு பணத்தை அள்ளிவீசுவது பற்றிய இடத்தையும், தகவலையும் மறைமுகமாக குறிப்புகளால் மெயில் அனுப்பினார். அதை புரிந்து கொள்ளாதவர்களும், போலி என்று எண்ணியவர்களையும் தவிர மற்றவர்கள் அங்கே கூடியிருந்தனர்.

அந்த நேரத்தில் அவர் சொன்னதை உண்மையாக்கி, ஹெலிகாப்டரில் பறந்தபடி பணத்தை வீசினார். இதுபற்றிய வீடியோ பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். உலகின் முதல் பணமழை என்று அந்த பதிவுக்கு அவர் பெயரிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story