ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலீபான் மதகுரு பலி


ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலீபான் மதகுரு பலி
x

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலீபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் மூத்த தலீபான் மதகுருவான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது தன்னுடைய செயற்கை காலில் வெடிகுண்டுகளை மறைத்து கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானிக்கு அருகில் சென்று வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். தலீபான் மதகுருவின் கொலைக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஷேக் இதற்கு முன் 2 கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர் ஆவார். சமீபமாக கடந்த 2020-ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதும், அந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கது.


Next Story