கெர்சன் நகரை மீட்டது உக்ரைன் - ரஷிய படைகளை தொடர்ந்து வெளியேற்றுவோம்: அதிபர் ஜெலன்ஸ்கி சபதம்!


கெர்சன் நகரை மீட்டது உக்ரைன் - ரஷிய படைகளை தொடர்ந்து வெளியேற்றுவோம்: அதிபர் ஜெலன்ஸ்கி சபதம்!
x

Image Credit:Reuters

தினத்தந்தி 13 Nov 2022 12:40 PM GMT (Updated: 13 Nov 2022 1:07 PM GMT)

உக்ரேனிய படைகளை கெர்சன் குடியிருப்பாளர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.

கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அறிவித்தது.இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேறின.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது" என்றார். ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர்.

சாலைகளில் குவிந்த மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினார்கள். இது தொடர்பாக வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்றிரவு காணொலி வாயிலாக உக்ரைன் மக்களிடம் ஆற்றிய உரையில், 'ரஷிய படைகளை உக்ரைனில் இருந்து வெளியேற்றிக்கொண்டே இருப்பேன்' என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதம் செய்துள்ளார்.

ரஷிய கட்டுப்பாடில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அவர் உறுதியளித்தார். அவர் கூறுகையில், 'நாங்கள் யாரையும் மறக்கவில்லை; யாரையும் கைவிடமாட்டோம். ரஷியப் படைகள் கெர்சனில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பை அழித்தன. எல்லாவற்றையும் மீட்டெடுக்க' அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையே, கெர்சன் குடியிருப்பாளர்கள் கெர்சனின் விடுதலையைக் கொண்டாடி வருகிறார்கள். அங்கே வந்த உக்ரேனிய படைகளை கெர்சன் குடியிருப்பாளர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

மறுபுறம், ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டுள்ளதால், ரஷியா கட்டுப்பாடில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளுக்கு ரஷியா ஒரு புதிய தற்காலிக தலைநகரை அறிவித்துள்ளது. 'ஹெனிசெஸ்க்' நகரம் இப்போது கெர்சனின் பிராந்தியத்தின் தற்காலிக நிர்வாக தலைநகராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story