அமெரிக்க மாலுக்குள் ஏலியன்கள் புகுந்ததாக கிளம்பிய பீதி.. உண்மை என்ன? போலீசார் விளக்கம்


அமெரிக்க மாலுக்குள் ஏலியன்கள் புகுந்ததாக கிளம்பிய பீதி.. உண்மை என்ன? போலீசார் விளக்கம்
x
தினத்தந்தி 8 Jan 2024 9:27 AM GMT (Updated: 8 Jan 2024 10:43 AM GMT)

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து இறங்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது. சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் மற்றொரு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.

ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் வந்ததாகவும் அதனை பார்த்ததாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிலர் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கூட ஏலியன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாகாணம், மியாமி பகுதியில் மால் ஒன்று அமைந்துள்ளது. இந்த மாலில் 10 அடி உயரம் கொண்ட ஏலியன் ஒன்று சுற்றித் திரிவதாக திடீரென புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மியாமி மாலுக்கு மேலே ஏலியன்கள் வாகனங்கள் என பரவலாக கூறப்படும் பறக்கும் தட்டுகளின் வெளிச்சம் தென்பட்டதும் இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாகவும் இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து ஏலியன்கள் புகுந்ததாக காட்டுத்தீ போல வதந்தி பரவியிருப்பதாகவும் மியாமி நகர போலீசார் கூறியுள்ளனர்.


Next Story