உகாண்டாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள்; 38 மாணவர்கள் பலி


உகாண்டாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள்; 38 மாணவர்கள் பலி
x

Image Courtesy: AFP

உகாண்டா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் பள்ளிக்கூடத்தை சூறையாடினர். இதில் 38 மாணவர்கள் உள்பட 41 பேர் பலியாகினர்.

நீண்ட கால ஆட்சிக்கு எதிர்ப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் யோவேரி முசெவேனி அதிபராக உள்ளார். இவரது நீண்ட கால ஆட்சிக்கு அங்குள்ள ஜனநாயக படைகளின் கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உகாண்டா அரசின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டனர். பின்னர் அண்டை நாடான காங்கோவில் தஞ்சமடைந்த அவர்கள் அதனை தலைமையிடமாக கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அத்துமீறி நுழைந்த கிளர்ச்சியாளர்கள்

இந்தநிலையில் காங்கோவின் எல்லை நகரமான மபோண்ட்வேயில் உகாண்டா நாட்டின் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் இந்த பள்ளி வழக்கம் போல் இயங்கியது. ஆனால் சில மர்ம நபர்கள் திடீரென அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

கையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள் அங்கு கண்ணில்படுகிறவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர். இதனால் அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

எனினும் இந்த தாக்குதலில் 38 மாணவர்கள் உள்பட 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடம் மற்றும் அருகில் இருந்த ஓட்டல் போன்றவற்றை அவர்கள் சூறையாடினர்.

அரசியல் கட்சியினர் கண்டனம்

இந்த தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் அதிபர் யோவேரி முசெவேனி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, `பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த தாக்குதல் குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது' என அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.


Next Story