வங்காளதேசம்: திரையரங்கிற்கு லுங்கி அணிந்து சென்றதால் டிக்கெட் வழங்க மறுப்பு - வீடியோ வைரலானதால் திரையரங்க நிர்வாகம் விளக்கம்!


வங்காளதேசம்: திரையரங்கிற்கு லுங்கி அணிந்து சென்றதால் டிக்கெட் வழங்க மறுப்பு - வீடியோ வைரலானதால் திரையரங்க நிர்வாகம் விளக்கம்!
x

டாக்காவில் செயல்பட்டு வரும் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில், லுங்கி அணிந்து சென்றவருக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவில் செயல்பட்டு வரும் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில், ஒருவர் லுங்கி அணிந்து கொண்டு சினிமா பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருடைய ஆடை சரிவர இல்லாததால், அவருக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுத்ததாக தெரிகிறது. கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. இதனை அடுத்து அந்த திரையரங்க நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், "நான் லுங்கி அணிந்து சென்றதால் தியேட்டர் நிர்வாகம் எனக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டது" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ பெரும் வைரலான நிலையில், அவருக்கு ஆதரவாக பலர் லுங்கி அணிந்து திரையரங்குகளுக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஸ்டார் சினிபிளக்ஸ் திரையரங்க நிர்வாகம், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

சினிபிளக்ஸ் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- வாடிக்கையாளர்களிடம் எதன் அடிப்படையிலும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஒரு நபர் லுங்கி அணிந்திருப்பதால், அவருக்கு டிக்கெட் வழங்கும் உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை. எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை அனுபவிக்க அனைவரும் வருமாறு வரவேற்கிறோம்.

இந்த சம்பவம் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இப்படியொரு சம்பவம் நடைபெற்றதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், அதனை எங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு பதிவிட்டுள்ளது.

அதன்பின்னர், அந்த திரையரங்க நிர்வாகம் பாதிக்கப்பட்ட நபரான சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே மல்டிபிளக்ஸ் திரையரங்கில் படம் பார்க்க அழைத்து, அவருடன் நிற்கும் புகைப்படங்களை அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story