அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம்! பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்


அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம்! பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்
x

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது, மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில், 65 ஓட்டுகளுடன் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அதை தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், பின்னர் அது அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க அந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, அது சட்டமாக அமலுக்கு வரும்.

இந்த மசோதாவை சட்டமாக மாற்ற அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட பின் அவர் கூறுகையில், "இந்த சட்டம் நிறைய உயிர்களைக் காப்பாற்றப் போகிறது, அதில் கடவுள் சித்தமாக இருக்கிறார்" என்று கூறினார்.

இதன்மூலம், அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மிகவும் முக்கியமான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story