ஜி-20 மாநாட்டில் சீன வெளியுறவு மந்திரி பங்கேற்பு


ஜி-20 மாநாட்டில் சீன வெளியுறவு மந்திரி பங்கேற்பு
x

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் சீனா பங்கேற்கும் என இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


பீஜிங்,


இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேச கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, சர்வதேச பொருளாதாரத்தில் காணப்படும் முக்கிய சவால்களில் ஜி-20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு பொது இலக்கை நோக்கிய பன்னாட்டு ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தயார் நிலையில் சீனா உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதனால், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங் பங்கேற்பார் என இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


Next Story