கொரோனா பரவல்; இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு பயண தடை விதித்த சவுதி அரேபியா


கொரோனா பரவல்; இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு பயண தடை விதித்த சவுதி அரேபியா
x

கொரோனா பரவலை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்து உள்ளது.

ஜெட்டா,

இந்தியாவில் முதல் மற்றும் 2வது கொரோனா அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து தடை உள்ளிட்ட கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.

இதேபோன்று விமான போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. விதிவிலக்காக, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்பதற்காக விமான சேவை தொடர்ந்தது.

இந்தியாவில் கொரோனா பரவலின் 3வது அலை ஏற்பட்டு பின்னர், சமீப காலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் கொண்டு, சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு தடை விதித்து உள்ளது.

இதன்படி, இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடை விதித்து உள்ளது.

சவுதி அரேபியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என்றும் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தி உள்ளது.


Next Story