பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட கோழைகள்; ஹமாஸ் அமைப்பை சாடிய அமெரிக்க அதிபர்


பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட கோழைகள்; ஹமாஸ் அமைப்பை சாடிய அமெரிக்க அதிபர்
x
தினத்தந்தி 26 Oct 2023 2:42 AM GMT (Updated: 26 Oct 2023 8:34 AM GMT)

பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கோழைகள் போல் ஒளிந்து கொண்டது என அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். அவர் அமெரிக்க அதிபர் பைடனை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் அல்பானீசுடன் இணைந்து அதிபர் பைடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய பைடன், இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், கூட்டணி நாட்டுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல், தன்னுடைய மக்களின் படுகொலைக்கு பதிலடி கொடுக்க உரிமை உள்ளதுடன், அதற்கான கடமையையும் கொண்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக, தற்காத்து கொள்வதற்கான இஸ்ரேலின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்.

காசா முனையிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ, பரந்து விரிந்துள்ள பாலஸ்தீனிய மக்களின் பிரதிநிதியாக ஹமாஸ் அமைப்பு இல்லை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என பைடன் கூறியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்ட கோழைகள் என சாடிய அமெரிக்க அதிபர் பைடன், காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.


Next Story