இலங்கையில் அவசர நிலை வாபஸ்: அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு


இலங்கையில்  அவசர நிலை வாபஸ்: அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
x

அவசர நிலை சட்டமானது மக்களை தன்னிச்சையாக கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு படையினருக்கு வழங்குகிறது.

கொழும்பு,

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால், இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் மின் விநியோகம் பாதித்தது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

தொடர் போராட்டங்களால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். நுற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

இதனால், இலங்கை முழுவதும் வன்முறை பரவிய நிலையில், கடந்த 6 ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிறப்பித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, இலங்கையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தது. தொடர்ந்து இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப்பெறப்பட்டுள்ளது. அவசர நிலை சட்டமானது மக்களை தன்னிச்சையாக கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு படையினருக்கு வழங்குகிறது.


Next Story