ஈக்வடாரில் பயங்கரம்: சிறை கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழப்பு


ஈக்வடாரில் பயங்கரம்: சிறை கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

ஈக்வடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.

குயிட்டோ,

தென் அமெரிக்கா நாடாக ஈக்வடார் உள்ளது. கொலை, கொள்ளை, பயங்கரவாதம், ஊழல், குடும்ப வன்முறை உள்ளிட்ட ஏராளமான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் நாடாக ஈக்வடார் திகழ்கிறது. இதனால் குற்ற விகிதம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஈக்வடார் முதன்மை வகிக்கிறது.

குற்றத்தை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் குற்றச்செயல்பாடுகள் குறையவில்லை. இதனால் பெரும்பாலான சிறைகள் நிரம்பி வழியும் நாடாக ஈக்வடார் உள்ளது. அங்குள்ள சிறைகளின் நிர்வாகத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் நாட்டில் போலீசார் எண்ணிக்கையும் குறைவு.

சிறை கலவரம்

சிறைகளுக்குள் படுகொலை, பணப்பறிப்பு உள்ளிட்ட செயல்கள் சாதாரணமாக அரங்கேறும். இதனால் அவ்வப்போது கைதிகள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

நாட்டின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறை கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகவிரோத கும்பல் இருதரப்பாக பிரிந்து இருந்து இந்த சிறையில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அது எல்லை மீறி அதிகார போட்டியாக உருமாறி மோதல் வெடித்து கலவரமானது.

களம் இறங்கிய ராணுவம்

கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்டனர். இதனால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

சிறைத்துறை அதிகாரிகள் ராணுவத்தின் உதவியை நாடினர். அதன்படி கலவரத்தை ஒடுக்க சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

31 கைதிகள் உயிரிழப்பு

எனினும் இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேதம் அடைந்த சிறை அறைகள், வளாகங்கள், சிறைச்சாலை உபகரணங்கள் ஆகியவற்றை சீர்ப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


Next Story