போருக்குப் பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கம் - ஐரோப்பிய ஒன்றியம் தகவல்


போருக்குப் பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கம் - ஐரோப்பிய ஒன்றியம் தகவல்
x

போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரஸ்சல்ஸ்,

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதனால் ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷியாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ரஷியா-உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


Next Story