ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசிய உரிமையாளர் கைது - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசிய உரிமையாளர் கைது - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
x

கோப்புப்படம்

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பெர்லின்,

ஜெர்மனியின் டுசல்டார்ப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனையடுத்து அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்கு இருந்தவர்கள் மரண பயத்தில் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே மற்றொருபுறம் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு பணி நடைபெற்றது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட 7 தீயணைப்பு வீரர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியின்போது இறந்த நிலையில் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரே வெடிகுண்டு வீசியதாக தெரிய வந்துள்ளது. எனவே அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story