இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு..!


இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு..!
x
தினத்தந்தி 13 Jun 2023 3:53 AM GMT (Updated: 13 Jun 2023 4:32 AM GMT)

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனபின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிந்து ஒரு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் மீது டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்த குற்றச்சாட்டை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாக் டோர்சி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

"இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், அப்போது அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன. விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனக்கூறி அதை செய்தார்களும் கூட; இத்துடன் டுவிட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன.

இந்தியாவில் டுவிட்டரை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. ஆம் இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான்" என்று அவர் கூறினார்.

விவசாயிகள் போராட்டம் முடிந்து ஒரு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் மீது டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்த குற்றச்சாட்டை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story