'டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது' - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு


டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு
x

டிரம்பின் வெளியுறவு கொள்கைகளை தன்னால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அதே சமயம் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிராக அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கிஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலரும் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் குடியரசு கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரசாரத்தில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மேலும் அவருடைய தேர்தல் பிரசாரத்துக்கு கோடி கணக்கில் நன்கொடை குவிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால் டிரம்புடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டிரம்புக்கும் தனக்கும் இடையே ஒரு சில விவகாரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை ரீதியாக இருவருக்கும் இடையே 90 சதவீதம் நல்ல உடன்பாடு உள்ளது என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார். மேலும் டிரம்பின் வெளியுறவு கொள்கை, வர்த்தகம் தொடர்பான திட்டங்களை தன்னால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.


Next Story