போர்ச்சுகல், ஸ்பெயினில் பரவும் வெப்ப அலை; பலி 1,000 கடந்தது


போர்ச்சுகல், ஸ்பெயினில் பரவும் வெப்ப அலை; பலி 1,000 கடந்தது
x

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பரவி வரும் நிலையில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1,000 கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



லண்டன்,

ஐரோப்பிய நாடுகளின் மேற்கத்திய பகுதியில் வெப்ப அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

போர்ச்சுகல் நாட்டில் வெப்ப அலையால் பெருமளவிலானோர் உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில் கடந்த வாரம் வியாழ கிழமை 116.6 டிகிரி பேரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. இது 2003ம் ஆண்டு பதிவான உச்ச வெப்பநிலையை விட சற்று குறைவு ஆகும்.

இந்த தீவிர வெப்ப அலை ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் பரவி, பெருமளவிலான காட்டுத்தீயும் ஏற்பட்டு உள்ளது.







போர்ச்சுகல் நாட்டில் மட்டுமே கடந்த வாரத்தில் 659க்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. இதில், வியாழ கிழமை மட்டுமே 440 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அண்டை நாடான ஸ்பெயினும் வெப்ப அலையில் இருந்து தப்பவில்லை. அந்நாட்டில் வெப்பம் சார்ந்த உயிரிழப்புகள் 368 ஆக பதிவாகி உள்ளது.

இந்த இரு நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 1,027 பேர் வெப்ப அலைக்கு உயிரிழந்து உள்ளனர்.

கடந்த வெள்ளி கிழமை மதியம் 60 வயது துப்புரவு பணியாளர் ஒருவர் மாட்ரிட் நகரில் பணியில் இருந்தபோது, வெப்பம் பொறுக்காமல் சரிந்து விழுந்து உயிரிழந்து உள்ளார். அவசரகால ஊழியர்கள் உடனடியாக வந்து உடலை பார்த்தபோது, வெப்பநிலை 106.9° பேரன்ஹீட்டாக இருந்தது.

பிரான்சின் மேற்கு பகுதியில் 111.2° பேரன்ஹீட் வெப்பம் நேற்று பதிவான நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பம் 104.2° பேரன்ஹீட்டை விட உயர்ந்து பதிவாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது, இங்கிலாந்தில் இதுவரை இல்லாத வெப்பம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story