அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி
x
தினத்தந்தி 26 Aug 2023 7:24 PM GMT (Updated: 27 Aug 2023 6:26 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூறினார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அதே சமயம் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிராக அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கிஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலரும் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் குடியரசு கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரசாரத்தில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மேலும் அவருடைய தேர்தல் பிரசாரத்துக்கு கோடி கணக்கில் நன்கொடை குவிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஒரு வேளை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால் டிரம்புடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "டிரம்புடன் துணை ஜனாதிபதியாக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சியா?" என விவேக் ராமசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் "இது என்னைப் பற்றியது அல்ல. இது நமது நாட்டைப் புதுப்பித்தல் பற்றியது, நமது இயக்கத்தின் தலைவராகவும், முகமாகவும் வெள்ளை மாளிகையில் இருந்து இதைச் செய்தால் மட்டுமே இந்த நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். என் வயதில் ஒருவருக்கு இது (துணை ஜனாதிபதி பதவி) ஒரு சிறந்த நிலை. நிச்சயமாக நான் அதை ஏற்பேன்" என கூறினார்.


Next Story