ஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்


ஈராக்:  திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்
x
தினத்தந்தி 27 Sep 2023 5:43 AM GMT (Updated: 27 Sep 2023 8:53 AM GMT)

ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

பாக்தாத்,

ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர்.

திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி முதற்கட்ட விசாரணையில், நிகழ்ச்சியில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், அந்த மண்டபத்தில் தீப்பற்றி கொண்டது என கூறப்படுகிறது.

அதிகம் தீப்பற்ற கூடிய பொருட்கள் அந்த மண்டபத்தில் இருந்துள்ளன. பாதுகாப்பு நடைமுறைகள் குறைபாடும் இதற்கு ஒரு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story