இத்தாலி பிரதமர் தேர்தலில் வெற்றி: முதல் பெண் பிரதமராகிறார் ஜியார்ஜியா மெலோனி

இத்தாலியின் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா மெலோனி தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார்.
இத்தாலி பிரதமர் தேர்தலில் வெற்றி: முதல் பெண் பிரதமராகிறார் ஜியார்ஜியா மெலோனி
Published on

ரோம்,

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை வெளியிட்டார்.

அதுபற்றிய தனது ராஜினாமா கடிதம் ஒன்றை அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து அங்கு பொதுத்தேர்தல் நடத்த முடிவானது. அதன்படி இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் அரசியல்வாதியான ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

இந்நிலையில், 600 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், வெற்றி பெற்றுள்ளோம் என மெலோனி கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றி மெலோனி கூறும்போது, எங்களுடன் நீண்ட நாட்களாக இல்லாத ஒவ்வொருவருக்கும் நான் அர்ப்பணிக்க விரும்பும் வெற்றியிது. இந்த இரவையே விரும்பினேன். நாளை முதல் எங்களுடைய மதிப்பை நாங்கள் காட்ட வேண்டும்.

இத்தாலியர்கள் எங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கமாட்டோம். ஒருபோதும் நாங்கள் அப்படி செய்ததும் இல்லை என மெலோனி கூறியுள்ளார்.

இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் மெலோனியின், பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியானது 26 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. அவரது கூட்டணி கட்சிகளான, மேத்யூ சால்வினி தலைமையிலான லீக் கட்சி, 9 சதவீதமும் மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான போர்ஜா இத்தாலியா கட்சி, 8 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளன.

இறுதி தேர்தல் முடிவுகள் இன்றிரவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புதிய அரசு அமைய சில வாரங்கள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com