ஜப்பான், சீனாவை போல்... உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும்; எலான் மஸ்க் எச்சரிக்கை


ஜப்பான், சீனாவை போல்... உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும்; எலான் மஸ்க் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 March 2023 3:56 PM GMT (Updated: 2 March 2023 3:57 PM GMT)

ஜப்பான் நாட்டை போல் உலக நாடுகளில் மக்கள் தொகையானது பெருமளவில் சரியும் என்று எலான் மஸ்க் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.



வாஷிங்டன்,


ஜப்பான் சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2022-ம் ஆண்டில் வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிறப்பு விகிதங்கள் குறைந்து உள்ளன என வேதனை தெரிவித்து இருந்தது.

அந்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டில், புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 728 என தெரிவித்தது. இது முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.1 சதவீதம் குறைவாகும். 7 ஆண்டுகளாக இதுபோன்ற சரிவு காணப்படுகிறது.

இதே ஆண்டில் இறப்பு விகிதம் 8.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. 15.8 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். மக்கள் தொகை எண்ணிக்கை பதிவு பற்றிய ஆவண பதிவுகள் தொடங்கப்பட்ட கடந்த 1899-ம் ஆண்டில் இருந்து, கடந்த ஆண்டில் பிறப்பு விகிதங்கள் மிக குறைவாக உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.

இதனை சுட்டி காட்டி, டுவிட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ஜப்பானில் கடந்த ஆண்டில், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு விகிதம் இரண்டு மடங்காக உள்ளது. மக்கள் தொகை பெருமளவில் சரிந்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த நடைமுறையானது இதனுடன் நில்லாமல், பிற உலக நாடுகளிலும் இதே போன்ற நிலைமை ஏற்படும் என எச்சரித்து உள்ளார். எலான் மஸ்க் எப்போதும் வேறுபட்ட பார்வையை கொண்டவர். அவர் முன்பு கூறும்போது பூமியில் போதிய அளவு மக்கள் தொகை இல்லை. இப்படியே போனால், செவ்வாய் கிரகத்திலோ அல்லது வேறு கிரகத்திலோ நாம் குடியேற முடியாது என கூறினார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சீன மக்கள் தொகையை பற்றி எலான் மஸ்க் குறிப்பிட்டார். அந்த பதிவில், சீனாவில் இன்னும் ஒரு குழந்தை கொள்கை தான் இருக்கிறது என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.

அந்நாட்டில் மூன்று குழந்தைகள் பெற்று கொள்ள 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்றளவும் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

வரும் காலங்களில் ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீத மக்கள் தொகையை சீனா இழக்கும். இது, உலக மக்கள் தொகையில் பெரும் எதிர்மறை தாக்கம் ஏற்படுத்தும் என அவர் பதிவிட்டார்.

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று குழந்தைகள் கொள்கையை அறிமுகப்படுத்திய போதிலும் சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் மக்கள் தொகை கடந்த ஆண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 8,50,000 பேர் குறைந்து 141.18 கோடியாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, தேசிய பிறப்பு விகிதமும் 2022-ம் ஆண்டில் 7.52 என்ற நிலையில் (1,000 பேருக்கு) இருந்து 6.77 ஆக குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட மரணங்களால் பிறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் சீனாவில் அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.




Next Story